பஞ்சகோசங்கள்

#பஞ்சகோசங்கள் , உயிரானது பல்வெறு நிலைகளில் எடுக்கின்ற பல்வேறுவிதமான உடல்கள்…..

1. பிறவி நிலையில் உயிருக்கு பஞ்ச பூதங்களாலான (நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம்) உடல் உண்டு. இது அன்னமயகோசம் (Gross Body). அதாவது உணவால் வளர்ந்த உடம்பு.

2. உயிர் உடலில் இருந்து பிரியும்போது நுண்ணுடலாகிய பிராணமய கோசத்துடன் ( subtle body) செல்லுகின்றது. இதனால்தான் உயிர் பிரிவதை பிராணன் போய்விட்ட்து என்று சொல்லுகின்றோம். மனோமய கோசம், விஜ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய உடல்கள் இதனுள்ளே உள்ளன. இவற்றை ஒட்டுமொத்தமாக பஞ்ச கோசங்கள் என்று கூறுவர். பஞ்ச என்றல் ஐந்து; கோசம் என்றால் உறை.

3. சுவர்க்கத்துக்குப் போகும் உயிர் பூதசார சரீரம் (Heaven Proof Body) என்னும் உடலைப் பெறுகின்றது.

4. நரகத்துக்குப் போகும் உயிர் யாதனா சரீரம் (Hell Proof Body) என்னும் உடலைப் பெறுகின்றது.

பூதனா சரீரம் போனால் புரியட்ட ரூபந்தானே
யாதனா சரீர மாகி இன்பதுன் பங்கள் எல்லாம்
நாதனார்ஆணை உய்க்க நரகொடு சுவர்க்கம் துய்த்துத்
தீதிலா அணுவாய் யோனி சேர்ந்திடும் சீவன் எல்லாம்
– மெய்கண்ட சாத்திரம்,
சிவஞானசித்தியார் சுபக்கம் பாடல் 126

சொற்பொருள்:
அணு – உயிர்,
யோனி – பிறப்பு

5. இறந்தபின்னர் இயமலோகத்துக்குப் போகாது ஆவியாகவும் பேய் பிசாசுகளாகவும் அலையும் உயிர்கள் பிரேத சரீரம் (Ghostly form) என்ற சரீரத்துடன் அலைகின்றன. இவற்றை அடக்கித் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைத்திருப்பவரே வைரவக் கடவுள். இதனால்தான் வைரவ மூர்த்தியைச் சுடலையிலும், ஊரெல்லையிலும், வளவு மூலைகளிலும் தாபித்து வழிபடுகின்றோம். வைரவரைத் துதித்தால் பேய், பிசாசுகள் அண்டா. குடும்பத்தில் அவல மரணம் நிகழ்ந்தால் வைரவரைத் துதி செய்து வர இறந்தவரின் ஆன்மா வைரவரின் கட்டுப்பாட்டில் வந்து சாந்தியடையும்.

• விரித்தபல் கதிர்கொள் சூலம் வெடிபடு தமரு கங்கை
தரித்ததோர் கோல கால பயிரவ னாகி வேழம்
உரித்துமை யஞ்சக் கண்டு வொண்டிரு மணிவாய் விள்ளச்
சிரித்தருள் செய்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
– 4ம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம்

• பரமனை மதித்திடாப் பங்கயாசனன்
ஒருதலை கிள்ளியே ஒழிந்த வானவர்
குருதியும் அகந்தையும் கொண்டு தண்டமுன்
புரிதரு வடுகனைப் போற்றி செய்குவாம்
– கந்தபுராணம் 09, வைரவர் துதி

6. அசுத்த மாயா உலகங்களில் பிறந்து வாழும் உயிர்களுக்கு கலை முதலிய வித்தியா தத்துவங்களாலான கலாதி சரீரம். இந்த உயிர்களுக்கு ஆணவம், கன்மம் ஆகிய இரு மலங்கள் மாத்திரமே உள்ளன; மாயா மலம் நீங்கிய உயிர்கள் இவை. இந்த இரு மல பந்தம் மாத்திரம் உடைய உயிர்களை பிரளயாகலர் என்று சைவம் கூறுகின்றது. இவை ஒரு சில பிறவிகளினூடாக முத்திநிலையை அடைகின்றன. அல்லது பிரளய காலத்தில் இச்சரீரம் நீங்கப்பெற்று மேல் நிலையை அடைகின்றன. நாம் வணங்கும் தியான நிலையில் அமர்ந்திருக்கும் சிவன் இங்குறைகின்ற ஸ்ரீகண்டருத்திரர் ஆவார். இவர் பிரளயாகல ஆன்மாக்களுள் உயர்நிலை அடைந்தவர். இவரே எமது பிரகிருதியில் படைத்தல், காத்தல், அழித்தல் தொழில்களைச் செய்கின்ற மும்மூர்த்திகளாகிய பிரம்மா, விஷ்ணு, உருத்திரர்களுக்குத் தலைவர்.

7. சுத்தமாயா உலகங்களில் பிறந்து வாழும் உயிர்களுக்கு பிந்து முதலான சிவ தத்துவங்களாலான வைந்தவ சரீரம். இந்த உயிர்களுக்கு ஆணவ மலம் என்னும் ஒரு மல பந்தம் மட்டும் உள்ளது; கர்மாவும், மாயையும் இல்லை. கர்மா இல்லாதபடியினால் மறு பிறவி இல்லை. இந்த ஒரே பிறவியுடன் முத்தி நிலையை அடைகின்றன. இங்கேதான் அனந்தேஸ்வரர் உள்ளார். இவர் முன்சொன்ன ஸ்ரீகண்டருத்திரருக்கும் தலைவர்.

8. முத்தி நிலையில் இறைவனே தான் முதன்முதலாக உயிருக்குக் கொடுத்த புரியட்டகாய உடலை நீக்குகின்றான். ஆகவே முத்தி நிலையில் ஆன்மாவுக்கு உடல் கிடையாது. மலங்கள் நீங்கிய இந்நிலையில் ஆன்மா இறைவனைப்போலத் தானும் சர்வ வியாபகமாய் நிற்கும். நீங்கினாலும் அழியாது அடங்கி இருக்கின்ற ஆணவமல சம்பந்தத்தால் ஆன்மா மீழாப் பேரின்பத்தை அநுபவிக்கின்றது.

• முத்தி தனில் மூன்று முதலும் மொழியக் கேள்
சுத்த அனுபோகத்தைத் துய்த்தல் அணு – மெத்தவே
இன்பம் கொடுத்தல் இறை, இத்தை விளைவித்தல்
மலம், அன்புடனே கண்டு கொள் அப்பா.
– மெய்கண்டசாத்திரம், உண்மைவிளக்கம் -50

• மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
– 8ம் திருமுறை, திருவாசகம்

• புரியட்ட காயம் புலப்பட எனக்கு
– ஔவையார் அருளிய விநாயகர் அகவல்

புரியட்ட காயம் பற்றியபதிவு ……
https://www.facebook.com/Hindu.Saiva/posts/pfbid0UJ55EX28n2jLQDiMe8sfz5mrViVi6kXJ1f2jTMb7xNrvTfH3xRZ1yr1VUPtjzqvil

Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD) அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).