Super Brain Yoga – நெற்றியில் குட்டி வழிபடுதல் ஏன்?

Super Brain Yoga
நெற்றியில் குட்டி வழிபடுதல் ஏன்?
விக்கினேசுரரைத் தரிசிக்கும் பொழுது முட்டியாகப் பிடித்த இரண்டு கைகளினாலும் நெற்றியிலே மூன்று முறை குட்டி, வலக்காதை இடக்கையினாலும், இடக்காதை வலக்கையினாலும் பிடித்துக்கொண்டு, மூன்று முறை தாழ்ந்து எழுந்து கும்பிடல் வேண்டும்.
விளக்கக்குறிப்பு: 1
தோப்புக்கரணம் – Super Brain Yoga:
தோப்புக்கரணம் போன்ற உடலின் நடுக்கோட்டைக் குறுக்காகக் கடந்து செய்யும் தொடுதல்கள், அசைவுகள், அப்பியாசங்கள் நரம்புத்தொகுதியினைத் தூண்டி புத்துணர்ச்சி அளிக்கின்றன என்று மருத்துவ விஞ்ஞானம் கூறுகின்றது. இதை இப்போது மூளைக்குரிய உன்னதமான யோகப்பயிற்சி – Super Brain Yoga -என்று அழைகின்றார்கள். இவ்விதமான அப்பியாசங்கள் மூளை மற்றும் நரம்பு பாதிப்பு உள்ளவர்களுக்கு சிகிச்சைமுறையாகவும் பரிந்துரைக்கப்படுகின்றது.
விளக்கக்குறிப்பு: 2
• எமது உடலில் பாதத்தில் இருந்து இடுப்பு வரையாக உள்ள பகுதி அக்கினி மண்டலம்; இடுப்பில் இருந்து கழுத்து வரையான பகுதி சூரியமண்டலம்; கழுத்துக்கு மேல் சந்திர மண்டலம்.
• சகஸ்ராரத்தில் இருந்து வடியும் அமிர்தம் சந்திரமண்டலத்தில் உள்ளது.
• மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பி, ஆறு ஆதாரச் சக்கரங்களினூடாக சுழுமுனை நாடியால் மேல் நோக்கிச் செலுத்தி அதனைச் சிரசில் உள்ள ஆயிரம் இதழ்த் தாமரையான சகஸ்ரார சக்கரத்தில் சிவத்துடன் சேர்க்கும் சிவயோகிகளுக்கு அந்த சிவ- சக்தி ஐக்கியத்தால் அமிர்தம் பெருகி நிறைந்து தானாகவே உள்நாக்கின் வழி கீழே வடிந்து நடுநெஞ்சில் சற்றே வலப்புறமாக உள்ள இதயத்தாமரையின் மத்தியில் ஆத்மலிங்க வடிவில் எழுந்தருளியுள்ள சிவத்தில் கொட்டி வழிந்து உடலில் செறியும்.
• சிவயோகிகள் அல்லாத ஏனையோருக்கு இவ்வாறு அமுதம் நிறைந்து தானாகச் சொட்டும் நிலை இல்லை, இவர்கள் தமது நெற்றியில் குட்டி வழிபடும்போது அற்ப அளவுக்கே உள்ள அமுதத்தில் சில துளிகளை இவ்வாறு கீழ்நோக்கிச் சொட்டச் செய்யலாம்.
• இதனால் உடலிலும், உள்ளத்திலும் சுறுசுறுப்பும், எழுச்சியும் உண்டாகின்றது. கற்பதற்கும், வழிபடுவதற்கும், தியானிப்பதற்கும் தேவையான மன ஒருமைப்பாடும் இதனால் கிடைக்கின்றது.
ஆய்ந்துரை செய்யில் அமுதம்நின் றூறிடும்
வாய்ந்துரை செய்யும் வருகின்ற காலத்து
நீந்துரை செய்யில் நிலாமண் டலமதாய்ப்
பாய்ந்துரை செய்தது பாலிக்கு மாறே
– 10ம் திருமுறை, திருமந்திரம் பாடல் 802
ஆறது வாகும் அமிர்தத் தலையினுள்
ஆறது ஆயிரம் முந்நூற் றொடைஞ்சுள
ஆறது வாயிர மாகும் அருவழி
ஆறது வாக வளர்ப்ப திரண்டே
– 10ம் திருமுறை, திருமந்திரம் பாடல் 695
Book Reference –
ஆறுமுக நாவலர் சைவவினாவிடையும்
Dr. Lambotharan Ramanathan (MD)
அவர்களின் விளக்கக்குறிப்புகளும் (நூல்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *